“மண்ணின் மைந்தன்” திரு தம்பிராஜா குருகுலராஜா
கிளிநொச்சிப் பிரதேச கல்வி மற்றும் சமூக பணிகளுக்காக கிளிமக்கள் அமைப்பினால் 2018 ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது ஆவணி 18ம் திகதி 2018ம் ஆண்டு இலண்டனில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தாயகத்தில் கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சிக்காக தனது காத்திரமான பங்களிப்பிணை பல்வேறு தளங்களிலிருந்து வழங்கியுள்ளார். ஆசிரியராகவும், தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் வட்டக்கச்சி மத்திய கல்லூரிகளில் அதிபராகவும் கண்டாவளை கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
1951 ம் ஆண்டு பிறந்த இவர் பரந்தனில் இயங்கிய நவஜீவனம் அமைப்பின் ஸ்தாபகர் தம்பிராஜா போதகரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர் இல்லம், மூத்தோர் இல்லம் மற்றும் மனநலம் பாதித்தோருக்கான இல்லம் என 1959ம் ஆண்டு தொடக்கம் இயங்கிவந்த நவஜீவனம் அமைப்பில் தனது தந்தையுடன் செயல்பட்ட இவர் 1978ம் ஆண்டு முதல் தர்மபுரத்தில் கானான் நவஜீவனம் எனும் தொண்டு அமைப்பையும் நடாத்தி வருகின்றார்.
கிளிநொச்சிப் பிரதேச கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு இவரது பணிகள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் நஹிரோ போன்ற தொண்டு அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. திரு தம்பிராஜா குருகுலராஜா அவர்களுக்கு KILI PEOPLE இன் 2018ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது வழங்குவதில் பெருமையடைகின்றோம்.